Published : 27 Apr 2020 12:52 PM
Last Updated : 27 Apr 2020 12:52 PM

சரியும் சவரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்: சலூன்கள் இல்லாததால் குழந்தைகளிடம் தலைதூக்கும் சளிப் பிரச்சினை

ஊரடங்கால் சலூன் கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், சவரத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சலூன்கள் மூடிக் கிடப்பதால் முடிதிருத்தம் செய்யாத சிறுவர்கள் மத்தியில் சளிப் பிரச்சினை தலைதூக்கி வருகிறது.

கரோனா தொற்று பரவி வருவதால் தமிழகத்தில் இதுவரை சலூன் கடைகள் திறக்கப் படவில்லை. இதனால் தொழில் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் சவரத் தொழிலாளர்களுக்கு நலவாரியப் பதிவின் அடிப்படையில் அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ஆனால், அதுவும் இதுவரை கைக்குக் கிடைக்காத நிலையில், முடிதிருத்துவோர் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதுகுறித்து குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் எஸ்.கணேசன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், “ஊரடங்கால் மாநிலம் முழுவதும் பல ஆயிரம் சவரத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகர்கோவில் மாநகரில் 428 சலூன் கடைகள் மூடியிருக்கின்றன. குமரியில் மட்டும் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு மாவட்டத்தின் நிலையே இப்படி என்றால் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நிலையை யோசித்துப் பாருங்கள். அரசு அறிவித்த நலவாரிய உதவித்தொகையும் இதுவரை கையில் கிடைக்கவில்லை. வீட்டு வாடகை, அன்றாட வாழ்க்கை ஓட்டம் எனக் கணக்கிட்டால் சவரத் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.

தமிழகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பலரும் சலூன் கடைகளில் வேலைசெய்து வந்தனர். கடைகள் மூடியிருக்கும் நிலையில் அவர்களையும் பணிக்கு அமர்த்திய சலூன் கடை உரிமையாளர்களே பராமரிக்கும் சூழல் உள்ளது. இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருமாதத்துக்கும் மேலாக முடிவெட்டும் தொழில் முடங்கியிருப்பதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடர்த்தியாக முடி வளரும்போது அதிக அளவுக்கு வியர்வை வெளிப்படும். தலைமுடி நீளமாக வளர்ந்திருப்பதால் தலையில் புண், பரு போன்றவற்றின் தொந்தரவுகளுக்கும் சளி, இருமல் தொல்லைக்கும் மக்கள் ஆளாகியுள்ளனர்.

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இந்தச் சூழல் புரியும். வீட்டிலேயே டிரிம்மிங் மிஷின் வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர் மொட்டை போட்டுக் கொள்கின்றனர். ஆனால், வெகுமக்களுக்கு அது சாத்தியம் இல்லாதது. சளி, இருமல் ஆகியவை கரோனாவுக்கான அறிகுறிகளோடு ஒத்திருப்பதால் மக்களுக்கும் தேவையற்ற அச்சம் வரும். தமிழக அரசு இதையெல்லாம் கருத்தில்கொண்டு தகுந்த கண்காணிப்புடன் சலூன் கடைகளை இயங்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஏழைத் தொழிலாளர்களின் நலனைக் காப்பதுடன் பொதுமக்களின் உடல்நலமும் காக்கப்படும்” என்று கணேசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x