

திருவாரூர் மாவட்டத்தில் இன்று முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருசக்கர வாகனங்கள் பாதசாரிகள் நடந்து செல்வாரை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்தநிலையில் முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் நேதாஜி சாலையில் மணமகன் மணமகள் வீட்டார் 8 பேர் பங்கேற்ற எளிமையான திருமணம் ஒன்றும் நடந்துள்ளது.
திருவாரூர் நேதாஜி சாலையில் வசிக்கும் தங்க மாரியப்பன் என்பவரது மகள் செல்வ மகேஸ்வரிக்கும், சென்னை கணேசன் என்பவரது மகன் தீபன் குமாருக்கும் இன்று காலை திருவாரூரில் பெண் வீட்டில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் மணமக்கள் வீட்டார் எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மணமக்கள் இருவரும் முகக் கவசம் அணிந்து அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர் மேலும் திருமணத்திற்கு வருபவர்களுக்கு கிருமிநாசினி தெளித்து அவர்களுக்கு முகக் கவசம் வழங்கி உள்ளே அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது