Published : 26 Apr 2020 07:41 AM
Last Updated : 26 Apr 2020 07:41 AM

கோவை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு- 9 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். தேனி, மதுரை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரில் 7 செமீ, மதுரையில் 5 செமீ, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஓரிரு இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புஉள்ளது.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக 9 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில் 106 டிகிரி, வேலூர், சேலம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x