Published : 25 Apr 2020 09:56 PM
Last Updated : 25 Apr 2020 09:56 PM
திமுக சார்பில் கரோனா நிவாரண உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் தொடரப்பட்டது. இதில் 5 நாளில் ஹெல்ப்லைன் நம்பருக்கு 5 லட்சம் பேர் உதவி கேட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்தை தொடங்கினார்.
இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஹெல்ப் லைன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆங்காங்கே மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள், நிர்வாகிகள் வாட்ஸ் அப் குழுக்கள் என பொதுமக்கள் நிவாரணத்தை ஒருங்கிணைப்பது என்றும் இதை திமுக தலைவர் ஸ்டாலினே நேரடியாக கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஹெல்ப்லைன் எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக ‘ஒன்றிணைவோம் வா’ குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் முகநூலில் ஸ்டாலின் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் 5 நாளில் 2 லட்சம் பேர் உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
“உதவி எண் (90730 90730) தொடங்கப்பட்ட 5 நாட்களில் இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளனர். லட்சக்கணக்கானோர் சிரமப்படுவதையே இது காட்டுகிறது. அவர்களுக்கு திமுக அரணாக நிற்கும். பேரிடரிலும் களத்தில் நிற்கும் உடன்பிறப்புகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT