Published : 25 Apr 2020 07:59 PM
Last Updated : 25 Apr 2020 07:59 PM

தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கரோனா; சென்னையில் 43 பேர்; பாதிப்பு எண்ணிக்கை 1,821 ஆனது 

தமிழகத்தில் 66 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் அதிக அளவில் 43 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 452 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் சென்னை, மதுரை, கோவையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் 4 நாட்களும், சேலம், திருப்பூரில் 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு அண்ணா சாலையின் ஒரு பகுதி சைதாப்பேட்டையிலிருந்து முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 66 ஆகும். அதைச் சேர்த்து 1,821 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 43 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மீதி 9 மாவட்டங்களில் 17 பேருக்கு தொற்று உள்ளது. நல்வாய்ப்பாக 27 மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று இல்லாமல் உள்ளது.

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் மற்றும் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழகத்தில் நேற்றுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 398 பேர்.

* 28 நாட்கள் தனிமைப்படுத்துதலைப் பூர்த்தி செய்தவர்கள் 87ஆயிரத்து159 பேர்.

* தற்போது தனிமையில் இருப்பவர்கள் 27 ஆயிரத்து 277 பேர்.

* அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 25 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகள் 80,110

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்கள் எண்ணிக்கை 72,965

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 7,707

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 66.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 38 / பெண்கள் 28
* இன்றைய மொத்த எண்ணிக்கை 1,821.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 94பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 960 பேர்.

* இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 452 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை 141, திருப்பூர் 110, திண்டுக்கல் 80 ,ஈரோடு 70 என்கிற எண்ணிக்கையுடன் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x