

பரவை முனியம்மாவின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்பச் செலவுகளுக்கு செலவுகளுக்கு மாதந்தோறும் 6,000/- ரூபாயும் அதிமுக சார்பில் வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக கட்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலை விவரித்துள்ளார். தன்னை இத்தகைய சூழலில் இருந்து காப்பாற்றி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் மறு வாழ்வு தருகின்ற வள்ளலாக முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.
அவரது ஏழ்மை நிலையையும், இயலாமையையும் உடனடியாகக் கண்ணுற்ற, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்பச் செலவுகளுக்கு செலவுகளுக்கு மாதந்தோறும் 6,000/- ரூபாய் நிதியுதவியும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.
மேலும், மதுரை - தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை எம்.ஜி.ஆர். அறக்கட்டளையே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.