Published : 25 Apr 2020 02:54 PM
Last Updated : 25 Apr 2020 02:54 PM

கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்; ரேபிட் டெஸ்டிங் கிட் கருவிகளை கொள்முதல் செய்யத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் ரேபிட் டெஸ்டிங் கிட் கருவிகளை கொள்முதல் செய்யத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட் கருவிகளை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

இந்த ரேபிட் டெஸ்டிங் கிட், ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் சீனாவைச் சேர்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்று.

இந்த கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல், கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த கருவிகளை கொள்முதல் செய்யத் தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கிட் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பரிசோதனைக்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x