

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்திலும் 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்குப் பகுதிகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்பகுதிகள் அனைத்துக்கும் சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு என்ன விதிகளை அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளதோ அவை அத்தனையும் பொருந்தும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட வாரியாக விவரம் :
திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகள்:
சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, திருநின்றவூர் பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 13 கிராமப் பஞ்சாயத்துகளும் புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 7 கிராமப் பஞ்சாயத்துகளும், பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 28 கிராமப் பஞ்சாயத்துகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
சோழவரம் ஒன்றியத்தில் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்பனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய 9 கிராமப் பஞ்சாயத்துகளும் மற்றும் மீஞ்சூர் ஒன்றியத்தில் மேலூர், சுப்புரெட்டிபாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் மற்றும் வெள்ளிவாயல்சாவடி ஆகிய 9 கிராமப் பஞ்சாயத்துகளும் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டப் பகுதிகள் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகள்:
சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம் மற்றும் பல்லாவரம் வட்டத்திலுள்ள தாம்பரம் பெரு நகராட்சி, பல்லாவரம் பெரு நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, மற்றும் பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் ஆகிய 5 பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம் மற்றும் முட்டுக்காடு (பகுதி) ஆகிய 2 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகள் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகள்:
சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாங்காடு பேரூராட்சி, குன்றத்தூர் பேரூராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அரசாணையின் அத்தனை கட்டுப்பாடுகளும் நாளை காலை 6 மணிமுதல் அமலுக்கு வருகிறது.