Last Updated : 25 Apr, 2020 11:18 AM

 

Published : 25 Apr 2020 11:18 AM
Last Updated : 25 Apr 2020 11:18 AM

ஊரடங்கை மீறி புதுச்சேரியில் கறி விருந்து: அமைச்சரின் உதவியாளர், ஓட்டுநர் உட்பட 14 பேர் மீது வழக்கு

புதுச்சேரியில் கறி விருந்து.

புதுச்சேரி

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் கறி விருந்தில் பங்கேற்றதாக, புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர், ஓட்டுநர் உட்பட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உதவியாளர் கிருஷ்ணராஜ், அவரது ஓட்டுநர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 14 பேர் வில்லியனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மணவெளிப் பகுதியில் உள்ள தோப்பில் தனது நண்பர்களுடன் கறி விருந்தில் பங்கேற்றனர். அதைப் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்து முகநூலில் பதிவிட்டனர். வீடியோக்கள் வாட்ஸ் அப்பிலும் பரவியது.

இப்புகைப்படங்கள் வில்லியனூர் போலீஸாரின் மொபைலுக்கும் வந்தது. அதையடுத்து விசாரித்து, கறி விருந்தில் பங்கேற்ற அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ், ஓட்டுநர் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

வில்லியனூர் போலீஸாரிடம் விசாரித்தபோது, "புதுச்சேரி அரசில் வனத்துறையின் ஒட்டுநர் கல்யாணசுந்தரம், கால்நடை மருத்துவமனை உதவியாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஓட்டுநர், உதவியாளராக பல ஆண்டுகளாக உள்ளனர்.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. வில்லியனூர் மணவெளி திருக்காஞ்சி சாலையில் அரசின் 144 தடை உத்தரவை மதிக்காமல் ஒரே இடத்தில் கூடி தனிமனித இடைவெளியின்றி கறி விருந்து சாப்பிட்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவினை அவர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

இதனைப் பலரும் கண்டித்ததுடன் சமூக ஆர்வலர்கள் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த விருந்துக் குழுவினர் முகநூலில் இருந்த புகைபப்டம் மற்றும் வீடியோக்களை அழித்துவிட்டனர். போலீஸாருக்குக் கிடைத்த சில புகைப்படங்களைக் கொண்டு வில்லியனூர் காவல் நிலையத்தில் இரு அரசு ஊழியர்கள் உட்பட 14 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவை மதிக்காமலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் நோய்த் தொற்றைப் பரப்பும் வகையில் 14 பேர் பெரிய குழுவாக எதிரெதிரே அமர்ந்து வாழை இலையில் மிக அருகில் அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது.15 அடி நீள வாழை இலையைப் போட்டு பிரியாணி, முட்டை என பரிமாறி இவர்கள் விருந்து சாப்பிட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x