Published : 25 Apr 2020 10:05 AM
Last Updated : 25 Apr 2020 10:05 AM

முதல்வர் அறிவித்த மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கை 100 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும்; வாசன்

தமிழக முதல்வர் அறிவித்த மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கை 100 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கும், பாதிப்பைக் குறைப்பதற்கும் தமிழக அரசு நேற்று சில மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மேலும் பயன் தரும். தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு அமலில் இருப்பினும் கரோனா பரவலின் தாக்கம் மக்கள்தொகை அதிகமாக உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் கரோனாவின் பரவல் அதிகமாகிக்கொண்டே போவதால் இந்த 3 மாநகராட்சிப் பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக நாளை 26.04.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.04.2020 புதன் இரவு 9 மணி வரை 4 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26.04.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 28.04.2020 செவ்வாய் இரவு 9 மணி வரை 3 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள்தொகை அதிகமுள்ள மற்றும் கரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகின்ற நகர்ப்புறப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு இப்போது இந்த அவசர, அவசிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

எனவே, இந்த முழு ஊரடங்குக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் முறையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் கரோனாவில் இருந்து விரைவில் விடுபடலாம். இந்த முழு ஊரடங்கு நாட்களில் மருத்துவம் மற்றும் அத்தியாவசியம் சார்ந்த துறையின் பணியாளர்கள் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவசர, அவசியத் தேவைகளுக்குப் பிரச்சினை இருக்காது.

நோய்ப் பரவலின் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கின் கட்டாயத்தை கவனத்தில் கொண்டு அரசு அறிவித்திருக்கிற முழு ஊரடங்குக்கான நாட்களில் அரசின் விதிமுறைகளை 100 சதவீதம் கடைப்பிடிப்போம்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசின் முயற்சி 100 சதவீதம் வெற்றி பெற பொதுமக்கள் அனைவரும் தனித்திரு, விழிப்புடன் இரு என்பதை மனதில் பதியவைத்து, 100 சதவீதம் நமது வருங்கால வாழ்வுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதி எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x