Published : 24 Apr 2020 11:28 AM
Last Updated : 24 Apr 2020 11:28 AM

கரோனா பாதித்த மீனாட்சியம்மன் கோயில் பட்டரின் தாய் உயிரிழப்பு: மதுரையில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டியதா?- ஒட்டுமொத்த நகரத்திற்கும் போலீஸார் சீல்

மதுரையில் நேற்று மீனாட்சியம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாய்க்கு கரோனோ உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று மாலை வரை 1,683 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரையில் நேற்று 2 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் ‘கரோனா’ பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் மீனாட்சியம்மன் கோயில் பட்டர் ஒருவரின் 72 வயது தாய் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சாதாரண மூச்சுதிணறல் இருந்ததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவுக்குழு அவருக்கு கரோனா இருப்பதை உறுதி செய்தது. சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். மதுரையில் இவரோடு சேர்ந்து இதுவரை கரோனாவுக்கு 2 பேர் உயிரிந்துள்ளனர்.

இறந்த மூதாட்டியின் உடல் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில், சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார் தலைமையில் சுகாதாரப்பணியாளர்கள் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய விதிமுறைகளின்படி தத்தனேரி சுடுகாட்டில் பாதுகாப்பாக தகனம் செய்தனர்.

பட்டரின் தாய் இறந்ததையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஊழியர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார், பட்டரின் குடுபத்தினர் 200 பேருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதன் முடிவுகள் என்னவாக இருக்குமோ? என்று மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை கலக்கத்துடன் காத்திருக்கிறது.

மதுரையில் சமூகப் பரவல்?

இறந்த மூதாட்டி, கடந்த 2 மாதத்திற்கு மேலாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அவரது உறவினர்கள் சிலர் கே.புதூரில் இருந்து அவரை சில நாட்களுக்கு முன் வீட்டில் வந்து பார்த்துச் சென்றனர். அப்படியிருந்தும் அவருக்கு தொற்று வந்துள்ளதால் மதுரையில் கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டிவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவரது வீட்டிற்கு பெண்மணி ஒருவர் வீட்டு வேலைகளுக்கு வந்து சென்றுள்ளார்.

பட்டரும், இந்த ஊரடங்கில் மீனாட்சியம்மன் கோயில் சென்று வந்துள்ளார். அதனால், பட்டரின் தாய்க்கு எந்த வகையில் தொற்று வந்தது என்பது தற்போது வரை தெரியவில்லை.

ஆட்சியர் டிஜி.வினய். மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில், மீனாட்சியம்மன் கோயில் ஊழியர்கள், பட்டர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார், பட்டர் மற்றும் அவரது குடும்பபத்தினர், அவரது வீட்டு வேலைக்கு வந்து சென்ற பெண்மணி, அவர் எந்தெந்த வீடுகளுக்கு வேலைக்கு சென்றாரோ அந்த வீட்டு குடும்பத்தினர் 200 பேருக்கு நேற்று மாலை உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனை செய்தனர்.

தற்போது வரை அதன் முடிவுகள் வரவில்லை. அதன் முடிவுகள் என்னவாகும் இருக்குமோ என்றும், சமூக பரவலாகிவிடுமோ என்றும் மாவட்ட நிர்வாகத்தினர், மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

நகர் முழுவதும் கட்டுப்பாடு:

இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதலே மதுரை மாநகராட்சிப் பகுதியில் மக்கள் ஒரிருடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல போலீஸார் தடை விதித்துள்ளனர்.

இதுவரை நோய் தொற்று கண்டறிப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே போலீஸார் ‘சீல்’ வைத்து மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறாமல் கண்காணித்து வந்தனர்.

ஆனால், இன்று முதல் ஒட்டுமொத்த மதுரை மாநகருக்கும் போலீஸார் ‘சீல்’ வைத்து பைக், கார்களில் மக்கள் வந்தால் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பால், காய்கறி, மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதோடு அவரவர் பகுதியிலே நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x