Published : 23 Apr 2020 09:15 PM
Last Updated : 23 Apr 2020 09:15 PM

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவத் தயார்; திருப்பூரில் தொற்றில் இருந்து மீண்டவரின் மனிதநேயம்

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த திருப்பூரை சேர்ந்தவர், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூர் காங்கேயம் சாலை ரேணுகா நகரை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்தார் .கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 18 நாட்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்ததாக மருத்துவர்களால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் பேசும்போது, "கடந்த 2-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு, கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். 20-ம் தேதி வீடு திரும்பினேன். செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் முழுக்கவனம் செலுத்தினார்கள். எனது மனைவி, மகள்கள் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். விரைவில் அவர்களும் வீடு திரும்புகின்றனர்.

என்னைப் போல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிளாஸ்மா சிகிச்சைக்கு பயன்படும், ஊநீர் வழங்கவும் தயாராக உள்ளேன்" என்றார்.

திருப்பூர் அரசு மருத்துவர் கூறும்போது, "உடலின் எதிர்ப்பு சக்திக்காக ஒருவரது உடலில் இருந்து பிளாஸ்மாவை மற்றொருவர் உடலில் செலுத்தி, அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது தான் இந்த சிகிச்சை. பிளாஸ்மா தருபவரின் உடலில் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே, பிளாஸ்மா இன்னொரு நோயாளியின் உடலில் செலுத்தப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x