சென்னையில் கடுமையாகும் ஊரடங்கு: ஒரே நாளில் அதிக வழக்குகள், வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் கடுமையாகும் ஊரடங்கு: ஒரே நாளில் அதிக வழக்குகள், வாகனங்கள் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. முன்னரே முடிவெடுத்தப்படி ஊரடங்கை கடுமையாக்குவது என்கிற அடிப்படையில் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்கத்தொடங்கியுள்ளனர். இதனால் ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.

இந்தியாவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகம் இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் ஒரு மாநிலமாக அதிக அளவில் கரோனா தொற்று பரவலை கொண்டுள்ளது.

மற்றொருபுறம் அதிகமான அளவில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 26 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. அதிலும் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளது. முக்கியமாக மண்டலம் 1(திருவொற்றியூர்) மண்டலம் 5 (ராயபுரம்) மண்டலம் 8 (அண்ணாநகர்) ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் கரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அதிகம் வெளியில் சுற்றுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பை கடுமையாக்கவும், 144 தடையுத்தரவை மேலும் கடுமையாக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வதும் கடும் சோதனையாக்கப்பட உள்ளது.

மதியம் 1 மணிக்குமேல் தேவையின்றி சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி, காரில் 2 பேர் மட்டுமே அனுமதி மீறினால் நடவடிக்கை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விதிமீறல்களை கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் சென்னையில் ஒரே நாளில் அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விபரம் வருமாறு:

144 சிஆர்பிசி சட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (22.4.2020) காலை 06.00 மணி முதல் இன்று (23.04.2020) காலை 06.00 மணி வரையில் சென்னை பெருநகர போலீஸார் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 2,287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதில் தொடர்புடைய 1,665 இருசக்கர வாகனங்கள், 97 ஆட்டோக்கள் மற்றும் 80 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1,842 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது சென்னையில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட பெரிய அளவிலான வழக்கு ஆகும். இது தவிர ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in