தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்  அரசாணை வெளியீடு

தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்  அரசாணை வெளியீடு
Updated on
1 min read

தமிழகத்தில் பேரிடர் காலத்தில் அனைத்து ஆலைகளும் முடக்கப்பட்ட நிலையில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சமுதாய விலகலை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகலள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அத்தியாவசிய தேவைகளுக்கான தயாரிப்புகள், போக்குவரத்து, விற்பனை தவிர வேறு எதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய முறையில் அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனாலும் 19 பேர் கொண்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரைப்படி 20-ம் தேதிக்கு பின்னர் தளர்வு இல்லை ஊரடங்கு நீடிக்கும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் இன்று முதல்வர் தொழிலதிபர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழும தலைவர் வெள்ளையன், டிவிஎஸ்& சன்ஸ் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் வெங்கட்ராமராஜா, தோல் ஏற்றுமதி குழுமம் அஹுல் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இவர்களுடன் இன்று காலை 11 மணி முதல் முதல்வர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஒருவேளை மே மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தொழிற்சாலைகளை இயக்குவது குறித்து ஆலோசனை கேட்கப்பட்டது.

ஒருவேளை ஆலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டால் தொழிற்சாலைகளிலேயே ஒரு பகுதியில் தொழிலாளர்கள் தங்க இடம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். யாரும் வெளியில் வர அனுமதி இல்லை, உள்ளுக்குள்ளேயே உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். அதிலும் சமூக விலகல் கட்டாயம் இருக்க வேண்டும் என பேசப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமாயின் தொழிற்சாலைகள் சில இயங்க அனுமதிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே அத்தியாவசிய தொழிற்சாலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. அவைகள் என்னென்ன தொழிற்சாலைகள் என்பது குறித்து அந்ததந்த மாவட்ட நிர்வாகங்கள் இடையே குழப்பம் நீடிப்பதால் அதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது:

1.சுத்திகரிப்பு ஆலைகள் , 2.பெரிய அளவிலான உருக்கு ஆலைகள், 3.பெரிய அளவிலான சிமெண்ட் ஆலைகள், 4. பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்முறை இரசாயன தொழில்கள்,5. உர ஆலைகள், 6.சர்க்கரை ஆலைகள்,7.கண்ணாடி ஆலைகள், 8. டயர் ஆலை, 9.காகித ஆலை,10 தொடர்ச்சியான செயல்முறை கொண்ட பெரிய கட்டுமானங்கள் உள்ளிட்டவை இயங்குவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in