Published : 22 Apr 2020 01:25 PM
Last Updated : 22 Apr 2020 01:25 PM

ஏழைகளுக்கு அதிக அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அறிவுரை

சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஏழைகளுக்கு அதிக அளவில் சிலிண்டர் வழங்க வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுரை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஆயிரம் சமையல் எரிவாயு (LPG) விநியோகஸ்தர்களுடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை மாலையில் உரையாடினார்.

அந்தக்கூட்டத்தில் அமைச்சர் பேசியது குறித்து அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

“முழு அடைப்பு (Lockdown) அமலில் உள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் எரிவாயு விநியோகஸ்தர்கள் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கிவரும் பணியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் பாராட்டினார்.

அதே சமயம் கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் (PMUY) பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டத்தின் (Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமையல் எரிவாயு சிலிண்டர்களை, உரிய வகையில் தொற்று நீக்குவதற்காக சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமைச்சர் பிரதான் பாராட்டினார்.

அதைப் போல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்குச் சென்று விநியோகிக்கும் பணியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வகை செய்வதையும் அவர் பாராட்டினார். தொற்று பரவாமல் இருக்க வீடுதோறும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்போரும், மற்றவர்களும் முகக்கவசம் அணிவது, ஆரோக்கிய சேது செயலி (AarogyaSetu app) பயன்பாடு, அடிக்கடி கை கழுவுதல், சமூக, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், ஆகியவற்றின் அத்தியாவசியத்தை உணர்த்தவும் அவர் அறிவுறுத்தினார்.

அதைப் போலவே களப்பணியாற்றும் விநியோகப் பணியாளர்கள் இத்தகைய விழிப்புணர்வை நுகர்வோரிடமும் பகிர்ந்து கொண்டதும் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் கூறினார். இப்பணிகளை விநியோகப் பணியாளர்கள் சமூக இடைவெளி, தொற்று நீக்குதல், சுகாதார நடவடிக்கை ஆகிய நிலையான இயக்க முறைமையை (Standard operating procedure) தொற்று அபாயம் உள்ள தாங்கள் பணியாற்றும் இடத்திலும் கடைப்பிடிக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன், LPG பணியாளர்களின் உடல் நலனைக் காப்பதற்குப் பரிவோடு செயல்பட்டு, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x