Published : 22 Apr 2020 08:05 AM
Last Updated : 22 Apr 2020 08:05 AM

பத்திர எழுத்தர்கள், ஆவண தயாரிப்பு அலுவலகங்கள் இயங்காததால் வெறிச்சோடும் சார்பதிவாளர் அலுவலகங்கள்: அடமான பத்திரம், திருமண பதிவுக்கு மட்டுமே சிலர் வருவதாக தகவல்

சென்னை

பத்திர எழுத்தர்கள், ஆவண தயாரிப்பு அலுவலகங்கள் இயங்காத நிலையில், ஏப்.20-ம் தேதிமுதல் பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்கள் பொதுமக்கள் வரத்தின்றி வெறிச்சோடியுள்ளன.

தமிழகத்தில் தற்போதுகரோனா பாதிப்பை கட்டுப்படுத் தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற அனைத்துஅலுவலகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் போக்குவரத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களும் வருவதால், கடந்த ஏப்.20-ம் தேதி முதல் தமிழகத்தில் 9 மண்டலங்களிலும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களும் 33 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கும் என்றும், அனைத்து பணியாளர்களும் உரிய முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுதவிர, வழக்கமான நாட்களில் தினசரி 60 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 24 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஒருவர் பதிவுமுடித்து அலுவலகத்தில் இருந்துவெளியில் சென்ற பின் மற்றொருவர் அனுமதிக்கப்பட வேண்டும். விரல் ரேகை பதிவு செய்யும் போது கைகழுவும் திரவம் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த அறிவுறுத்தல்களுடன் நேற்று முன்தினம் முதல் முழுமையாக சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கத் தொடங்கின. பல்வேறு பகுதிகளில் அரசு அறிவுறுத்தல்களுக்கும் ஒரு படிமேலாக, முழு உடல் பாதுகாப்பு கவசங்களை அணிந்து அலுவலர்கள் பணியாற்றினர். ஆனால், முதல் நாளில் 580 பதிவுகள் மட்டுமே நடைபெற்றதாகவும், நேற்று அதைவிடவும் குறைவாக பாதிவுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பதிவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

பதிவுத்துறை அலுவலகமும், பணியாளர்களும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்திர எழுத்தர்கள், பத்திரங்களை தயாரிக்கும் அலுவலகங்கள் இயங்கவில்லை. இவை இயங்க அனுமதியில்லை. இதை விட, பொதுமக்கள் வெளியில் அத்தியாவசியத்தேவைக்கு மட்டுமே வரஅனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவுக்காக அவர்கள்வெளியில் வர காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால், அலுவலகம் திறந்திருந்தாலும் பொதுமக்கள் வரத்து என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

சென்னை உட்பட முக்கிய பகுதிகளில் தினசரி60 டோக்கன்களுக்கு பதிவு நடக்கும் நிலையில், ஒரு சிலர் மட்டுமே வந்து செல்லும் நிலைஉள்ளது. குறிப்பாக, வங்கிக்கடனுக்கான அடமான பத்திரங்கள் பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்று பெறுதல், முந்தைய பதிவுகளுக்கான பத்திரம் பெறுதல் ஆகியவற்றுக்காக சிலர் வந்து செல்கின்றனர். பத்திர எழுத்தர்கள் செயல்படவும், ஆவண தயாரிப்பு அலுவலகங்கள் இயங்கினால் மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தினசரி 60 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 24 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். ஒருவர் பதிவுமுடித்து வெளியில் சென்ற பின் மற்றொருவர் அனுமதிக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x