

ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் நாள்தோறும் 3 லட்சம் சமையல் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனைவரும் வீட்டில்இருப்பதால் சமையல் காஸ்சிலிண்டரின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நாள்தோறும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் சமையல்காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
முழுவீச்சில் காஸ் நிரப்பும் பணி
இதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 12 பாட்லிங் பிளான்ட்களிலும் காஸ் நிரப்பும் பணிமுழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் சமையல் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் அனைவரும் முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை அணிந்து பணிபுரிகின்றனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.