மருத்துவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்: அமைச்சர், மருத்துவ சங்க பிரதிநிதிகள், தலைமைச் செயலர், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு

மருத்துவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்: அமைச்சர், மருத்துவ சங்க பிரதிநிதிகள், தலைமைச் செயலர், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு
Updated on
1 min read

மருத்துவர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டதால் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகளுடன் மருத்துவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள்மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மறைந்த மருத்துவர் சைமனின் சடலத்தினை அடக்கம் செய்ய சென்றபோது, உறவினர்கள், சவ ஊர்தி ஓட்டுநர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட 21 நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கழகத்தின் நிர்வாகிகளும், தமிழ்நாடுஅரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளும் தங்களது நன்றியினை அரசுக்கு தெரிவித்தார்கள்.

மேலும், மேற்காணும் இரு சங்கங்களும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை பணியாளர்களின் பணி பாதுகாப்புத் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்தனர்.

மேற்காணும் கோரிக்கைகளை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் இருவரும் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் அரசு தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் பீலா ராஜேஸ், டிஜிபி திரிபாதி,சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் க. குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் ச.குருநாதன், இந்தியமருத்துவ கழகத்தின் சார்பாக சி.என்.இராஜா, மாநிலத் தலைவர், என்.முத்துராஜன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஜி. சந்திரசேகர் உள்ளிட்ட மருத்துவ சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in