Last Updated : 21 Apr, 2020 05:49 PM

 

Published : 21 Apr 2020 05:49 PM
Last Updated : 21 Apr 2020 05:49 PM

மார்ச் மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை: அதிருப்தியில் சிவகங்கை கரோனா வார்டு ஒப்பந்த பணியாளர்கள்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்காததால் அதிருப்தி அடைந்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 -க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்கள் காவல், துப்புரவு, மருத்துவ உதவி போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் மூலம் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒப்பந்த பணியாளர்களுக்கு ஷிப்டு அடிப்படையில் கரோனா வார்டிலும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு மார்ச் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒப்பந்த பணியாளர்கள் கூறுகையில், ‘கரோனா வார்டில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்காமல், ஏற்கனவே கொடுத்த ஊதியத்தையும் நிறுத்திவிட்டனர்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இதேநிலை நீடித்தால் போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை,’ என்று கூறினர்.

மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘இதே பிரச்சினை தமிழகம் முழுவதும் உள்ளது. ஓரிரு நாட்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x