மருத்துவர் உடல் அடக்கத்துக்கு எதிர்ப்பு; அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.19), ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு இடுகாட்டுக்குக் கொண்டு சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர், கரோனா தொற்றுக்குப் பயந்து மருத்துவர் உடலை அங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி, அங்கிருந்தவர்களை கல், கட்டையால் தாக்கியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியதில் அதன் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பணியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மேலும், மருத்துவர் உடலைப் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இச்சம்பவத்தை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், கரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.21) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவிலிருந்து நம்மைக் காக்கப் போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in