Last Updated : 20 Apr, 2020 12:42 PM

 

Published : 20 Apr 2020 12:42 PM
Last Updated : 20 Apr 2020 12:42 PM

கரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழும்: பாஜக தலைவர் இல.கணேசன் நம்பிக்கை

மதுரை

‘கரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் விரைவில் மீ்ண்டெழும். இந்த இக்கட்டான சூழலில் கட்சிகள் அரசியல் செய்யாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் சென்னையில் இருந்தவாறு ஜூம் வீடியோ செயலி வழியாக மதுரை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

கரோனா பாதிப்பில் தமிழகம் கவலைக்குரிய இடத்தில் தான் உள்ளது. இருப்பினும் விரைவில் தமிழகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கையுள்ளது. தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஊரடங்கு அமலான நாளில் இருந்து 3.74 லட்சத்துக்கும் அதிகமான பாஜகவினர் களப்பணியாற்றி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு வரை பாஜக சார்பில் 27.34 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 5.63 லட்சம் பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 3.91 லட்சம் பேருக்கு முக கவசம், 7.21 லட்சம் பேருக்கு பிற மருந்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாஜக உதவியால் 48.10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

பாஜக சார்பில் உதவி வழங்குவதற்கு மாநில அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்த சோதனையான காலக்கட்டத்தில் கூடுமான வரை அரசியல் செய்யாமல் அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

கரோனாவால் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்தியா மீளும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.

கரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு கூடுதல் நிவாரண நிதி தேவைப்படுகிறது. இதனால் மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும். இது தொடர்பாக பிரதமருடன் முதல்வர் பேசியுள்ளார். பிரதமர் நல்ல முடிவெடுப்பார். விரைவில் தமிழகத்துக்கு உரிய பங்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும்.

மே 2 வரை டோல்கேட் வசூலை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டோல் கட்டணத்தை உயர்த்திருப்பதாக கூறுகிறார்கள். இதன் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதிப்பு இல்லாத சூழல் திரும்பும் வரை அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அரசின் இருப்பது நல்லது.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

தமிழக பாஜக மாநில செயலர் பேராசிரியர் சீனிவாசன் கூறுகையில், பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் மக்கள் பிச்சை எடுப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் அவதூறாக பேசியுள்ளார்.

இக்கட்டான சூழலில் மக்களிடம் நிவாரண நிதி கேட்பதும், அந்த நிவாரண நிதியை மக்களுக்கு பயன்படுத்துவதும் அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறையாகும்.

திமுக ஆட்சியிலும் மக்களிடம் நிவாரண நிதி வசூல் செய்துள்ளனர். இதனால் கருணாநிதி பிச்சை எடுத்தார் என்று தயாநிதி மாறான் சொல்வாரா? தயாநிதி மாறன் பேச்சை பாஜக கண்டிக்கிறது. தயாநிதி மாறன் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும். அவரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x