

தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்கும் அரசின் நடவடிக்கைகள், முதல்வர் பழனிசாமி அளிக்கும் தகவல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. உயிரை துச்சமாகக் கருதி, அனைத்து துறை அதிகாரி களும் பணியாற்றி வருகின்றனர்.
அரசின் நடவடிக்கைகளுக்கு ஸ்டாலின் தொடக்கத்தில் பாராட்டு தெரிவித்தார். அதன்பின், மக்கள் மனதில் அரசு நல்ல இடத்தை பிடித்து வருவதைப் பார்த்து தற்போது இடையூறு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு மாநிலத்துக்கும், வேறு மாநிலத்துக்கும் ஏதேனும் பிரச்சினை இருக்கும்போதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய கூட்டம்தான் நடத் தப்பட வேண்டும். இதை விமர்சிப்பது வேடிக்கையானது. அரசியல் செய்ய இது நேரமல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.