

இன விருத்தியைக் காரணம் காட்டி 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்திவிட்டு பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படாத நிலையில் வங்கக்கடலில் சென்னை அருகே பன்னாட்டு நிறுவன கப்பல்கள் மீன்பிடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உள்ளதால், கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 15 ம் தேதி வரை தமிழகத்தில் பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் உட்பட அனைத்திற்கும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருத்தது.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சுழற்சி முறையில் சமூக விலகலை கடைபிடித்து மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பைபர் படகுகளின் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலில் சென்ற போது மயிலாப்பூர் நொச்சிக் குப்பத்திலிருந்து நேர் கிழக்கே 27° பாய்ண்டில் பன்னாட்டு வர்த்தக மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்வளத்தை பெருக்க மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடித்தடைக்காலம் அமலில் உள்ளது. ஆனால் மீன்கள் இனப்பெருக்கம் என்ற நோக்கத்தையே சீரழிக்கும் வகையில் தற்போது சென்னை அருகே பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்தி சம்மந்தப்பட்ட வர்த்தக கப்பல் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய மீனவர் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன.
இந்நிலையைல் இந்த நிகழ்வைக் ட்விட்டரில் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?
இவ்வாறு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.