Last Updated : 18 Apr, 2020 05:07 PM

 

Published : 18 Apr 2020 05:07 PM
Last Updated : 18 Apr 2020 05:07 PM

இனி 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு பெறலாம்: தூத்துக்குடியில் கரோனா ஆய்வகம் தொடக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தை தமிழக செய்தி மற்றும்விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மருத்துவக் கல்லூரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டன.

இதனால் முடிவுகள் 24 மணி நேரம் கழித்தே கிடைத்தது. தற்போது தூத்துக்குடியிலேயேபரிசோதனை செய்ய முடியும். இதன் மூலம் 6 மணி நேரத்தில் முடிவை பெறலாம். ஒரு நாளைக்கு 70 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

24 மணி நேரமும் செயல்படும் இந்த ஆய்வகத்தில் 2 மருத்துவர்கள், 4 தொழில்நுட்பவியலாளர்கள் என 6 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். மாவட்டத்தில் இதுவரை 1347 பேருக்கு கரோனை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் 26 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் 2100தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x