

கரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி தினமும் 90 நிமிடங்கள் ஆணிப் படுக்கையில் தியானம் செய்து வருகிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த யோகாசனப் பயிற்சியாளர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (54). யோகாசன பயிற்சியாளரான இவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தினமும் 90 நிமிடங்கள் ஆணி படுக்கையில் அமர்ந்து கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெறக்கோரி தியானம் செய்து வருகிறார்.
இதுகுறித்து ராஜகோபால் கூறியபோது, கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் நோயால் உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து தற்போதுவரை தினமும் காலையில் முகக்கவசம் அணிந்து 90 நிமிடங்கள் ஆணிப் படுக்கையில் அமர்ந்து தியானமும் அதைத் தொடர்ந்து பல்வேறு ஆசனங்களும் செய்து வருகிறேன், கொடிய நோய்த் தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதே எனது முதல் பிரார்த்தனை என்றார் ராஜகோபால்.