ஊரடங்கை பயன்படுத்தி குமரி வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடும் கும்பல்: காட்டுப்பன்றியை சமைத்தவர்கள் வேட்டை நாய்களுடன் கைது- வனத்துறையினர் நடவடிக்கை

ஊரடங்கை பயன்படுத்தி குமரி வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடும் கும்பல்: காட்டுப்பன்றியை சமைத்தவர்கள் வேட்டை நாய்களுடன் கைது- வனத்துறையினர் நடவடிக்கை
Updated on
1 min read

கன்னியாகுமரி வனப்பகுதியில் ஊரடங்கை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. அழகியபாண்டிபுரம் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்த கும்பலை வேட்டை நாய்களுடன் வனத்துறையினர் கைது செயழ்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் மிளா, காட்டுப்பன்றி, சிறுத்தை, யானை, மான் போன்ற விலங்குகள் அதிக அளவில் உள்ளது. வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் வன விலங்குகள், மற்றும் பறவைகளை பாதுகாக்கும் பகுதியாக குமரி மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது.

இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் நடமாட்டமின்றி மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இச்சூழலை பயன்படுத்தி குமரி வனப்பகுதியில் பலர் கும்பலாக வன விலங்குகளை வேட்டையாடி வருவது குறித்து வனத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து அழகியபாண்டியபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலகேசத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக அழகியபாண்டியபுரம் உதவி வன பாதுகாவலர் ஹேமலதாவுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் வன விலங்ககள் வேட்டையாடுவது குறித்து ஆய்வு நடத்துமாறு வன ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆலகேசத்தில் சென்று வன ஊழியர்கள் சென்று விசாரணை நடத்தியபோது, அங்கு காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடியதும், அந்த காட்டுப்பன்றியை வீட்டில் சமைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் காட்டுப்பன்றியை வேட்டையாடியது வெள்ளாம்பியை சேர்ந்த மாரிமுத்து(35), குமார்(38), மனோகரன்(40) என தெரியவந்தது. வனத்துறையினர் சோதனையிடுவதை அறிந்த குமார் தப்பி ஓடிவிட்டார். மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வேட்டையாடி சமைத்து வைத்திருந்த காட்டுப்பன்றி இறைச்சி, வேட்டையாட பயன்படுத்திய 5 வேட்டை நாய்கள், அரிவாள், கத்தி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

வனவிலங்கை வேட்டையாடியதற்காக 3 பேருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி மக்கள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் புகுந்து வன விலங்குகள், பறவைகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி வன பாதுகாவலர் ஹேமலதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in