Published : 18 Apr 2020 12:05 PM
Last Updated : 18 Apr 2020 12:05 PM

கோவையில் இருந்து திருவாரூருக்கு 2 வயது கைக்குழந்தையுடன் காலில் செருப்பு இன்றி நடந்து சென்ற தம்பதியர்; ஆதரவுக்கரம் நீட்டிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 

மீட்கப்பட்ட தம்பதி

திருப்பூர் 

கோவையில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு 2 வயது குழந்தையுடன் காலில் செருப்புக் கூட இல்லாமல், நடந்து சென்ற கூலித் தொழிலாளர் தம்பதியரை திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் தனசேகர் (28). இவரது மனைவி சுகன்யா (22). இத்தம்பதியருக்கு 2 வயதில் அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தங்கியிருந்தனர். கருமத்தம்பட்டியில் உள்ள விசைத்தறிக் கிடங்கில் தனசேகர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக விசைத்தறிக் கிடங்கு உரிமையாளர் தந்திருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், தம்பதியர் மிகுந்த சிரமப்பட்டனர். கையில் இருந்த காசை முழுவதுமாக தம்பதியர் செலவழித்துள்ளனர். தற்போது கையில் காசு எதுவும் இல்லாததால், குழந்தை மற்றும் தம்பதியரும் சாப்பிடவே சிரமப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தனசேகர் கூறியதாவது:

"எங்களது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி. விசைத்தறிக் கிடங்கில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், கையில் காசு இன்றி குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் குடும்ப அட்டை எங்களிடம் இல்லாததால், ரேஷன் பொருட்களும் பெற முடியவில்லை. குழந்தையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் நடந்தே ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம்.

அதன்படி கோவை கருமத்தம்பட்டியில் இருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். திருப்பூர் காங்கேயம் சாலையில் வந்தபோது, காலில் செருப்பு இன்றி நடந்து வருவதை கவனித்த, அப்பகுதியில் இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் எங்களை விசாரித்தனர். அப்போது எங்கள் நிலையை எடுத்து சொன்னோம்.

அவர்கள் உடனடியாக எங்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் எங்களுக்கு உணவு மற்றும் குழந்தைக்கு தேவையான பால், ரொட்டி மற்றும் செருப்பு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தந்தனர்" என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கூறியதாவது:

"தம்பதியர் சுமார் 60 கிலோ மீட்டருக்கு மேல், காலில் செருப்புக் கூட இல்லாமல் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு கடும் வெயிலில் வருவதை திருப்பூர்- காங்கேயம் சாலையில் கவனித்தோம். இங்கு அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்து தருவதென முடிவெடுத்தோம்.

இது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பினோம். அவர் நேர்முக உதவியாளர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தம்பதியர் திருப்பூரில் இருந்து செல்ல, வாகனத்துக்கு அனுமதி கோரியுள்ளோம். ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x