Published : 18 Apr 2020 10:29 AM
Last Updated : 18 Apr 2020 10:29 AM

தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலுயுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.18) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் கரோனா தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்ட ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஏற்கெனவே சலுகைகளை அறிவித்தது பயன் தருகிறது.

அதாவது, ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்ட போது சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கி சம்பந்தமான சலுகைகளை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப வங்கித் தவணைக்கான சலுகைகள், வட்டி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நெருக்கடியான சூழலில் ஏற்றுமதியானது 34.5 சதவீதம் சரிவை சந்தித்ததால் பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கிறது. மேலும் கரோனாவின் தாக்கம் நீடிப்பதால் தொடர்ந்து ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தொழில்கள் மேலும் பாதிக்கப்படுவதால் பல்வேறு சலுகைகளை அனைத்து தரப்பு மக்களும் ரிசர்வ் வங்கியிடம் எதிர்பார்த்தனர்.

இதன் பிரதிபலிப்பாக நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதுவும் சிறு, குறு தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த துறையினருக்கும், மற்ற துறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, இந்த சலுகைகள் சிறு, குறு தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் அடைந்துள்ள சிரமத்தை குறைக்கவும், இதன் தொடர்ச்சியாக சிறு, குறு தொழில்கள் படிப்படியாக உயரவும் பேருதவியாக இருக்கும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் நபார்டு, சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

எனவே, நாட்டு மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிதிச்சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச்செய்யவும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் முயற்சிகள் மென்மேலும் பலன் தரும். கரோனாவால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பையும், நாட்டின் பொருளாதார பாதிப்பையும் கவனத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் சலுகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும்.

அதாவது, கடந்த மாத இறுதியில் பொதுமக்களுக்கு ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகளை அறிவித்ததோடு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கினால் தொழில்கள் மேலும் பாதிக்கப்படுகின்ற சூழலில் மீண்டும் பொருளாதாரச் சலுகையை அளித்திருப்பதும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் பெற்று வந்த 30 சதவீத கடனுதவி 60 சதவீதம் வரை பெறுவதற்கு அனுமதி அளித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

எனவே கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவும், சலுகைகளும் அளித்திருக்கிற மத்திய அரசு தமிழகத்துக்கான நிதியையும் உடனே வழங்கிட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x