

ஊரடங்கு உத்தரவை மீறியதாகதமிழகம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர்கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தடை உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 85 ஆயிரத்து 896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை படிப்படியாக திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையின்றி வெளியே இயக்கப்படும் வாகனங்களும் பறிமுதல்செய்யப்படுகின்றன. ட்ரோன் மூலமும் போலீஸார் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர் கைது செய்யப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுபோக 1 லட்சத்து 85 ஆயிரத்து 896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக ரூ.98 லட்சத்து 7 ஆயிரத்து 394 வசூலிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள் சேகரிப்பு
தடை உத்தரவை மீறியதாகபறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் முறைப்படி திரும்ப ஒப்படைக்கப்படும் என சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் விதிமுறைகளுக்கு உட்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை எத்தனை வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்ற பட்டியலையும் டிஜிபி அலுவலக அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அதன் விபரமும் வெளியிடப்பட உள்ளது.
சென்னை பெருநகரில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல்நேற்று காலை 6 மணி வரைதடை உத்தரவை மீறியதாக 1,029வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 856 இருசக்கர வாகனங்கள், 70 ஆட்டோக்கள் மற்றும் 55 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 981 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.