Last Updated : 17 Apr, 2020 07:02 PM

 

Published : 17 Apr 2020 07:02 PM
Last Updated : 17 Apr 2020 07:02 PM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா தொற்று ஏற்பட்ட 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா தொற்று ஏற்பட்ட 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

கரோனா வைரஸ் தொற்றால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 24 பேர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் இன்று (ஏப்.17) மாலை அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர் கரவொலி எழுப்பி 16 பேரையும் வழியனுப்பி வைத்தனர். அவர்களிடம் வீட்டில் குறைந்தது 15 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேடு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் செந்தில் குமார் கூறியபோது, "விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

தற்போது நோய்த்தொற்று உள்ள 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பிலிருந்த 1,858 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் 639 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என ஆய்வறிக்கை வந்துள்ளது. நேற்று உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 44 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x