Last Updated : 17 Apr, 2020 05:27 PM

 

Published : 17 Apr 2020 05:27 PM
Last Updated : 17 Apr 2020 05:27 PM

ஜோசியம் கூறாமல் தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

"ஜோசியர்கள் போல் கூறுவதால் இரண்டு நாளில் கரோனா குறையாது. தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்" என, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

தெற்கு ரயில்வேயில் 530 பெட்டிகளை கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, நெல்லை ரயில் நிலையங்களில் 45 பெட்டிகள் கரோனா நோய் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் 25 பெட்டிகள் நெல்லையில்18 பெட்டிகள் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மதுரை மாவட்டம் மட்டுமின்றி வேறு எந்த நகரத்திற்கு வேண்டுமானாலும் ரயில்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.

ஒருபெட்டியில் 18 நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்கும்அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முதல்வர் தற்போது தமிழகத்தில் கரோனா நோய் தொற்று குறைந்துள்ளது என்று கூறியுள்ளாரே என, அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், "கேரளாஅரசு ரேண்டம் பரிசோதனைகளை நடத்தியுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் இன்றைக்கு நிலைமை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

நாளை என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், தமிழகத்தில் கரோனா தொற்று குறைகிறது என்றால் நல்ல விஷயம் தான். சோதனைகளை அதிகரிக்காமல் ஜோசியர் சொல்வதைப் போல் இரண்டு தினத்தில் குறைந்துவிடும் என முதல்வர் கூறியுள்ளார்.

மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க ராபிட் கிட்டுகள் வந்துள்ளதாக சொல்லியுள்ளனர். பரிசோதனைகளை தாமதமின்றி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டுமென்றால் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தமிழக அரசு அதிகமான பரிசோதனைகளை நடத்தவில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x