உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்.20 முதல் செயல்படும்: நீதிபதிகள் பட்டியல் அறிவிப்பு

உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்.20 முதல் செயல்படும்: நீதிபதிகள் பட்டியல் அறிவிப்பு
Updated on
1 min read

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப். 20 முதல் அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிஷியல்) டி.வி.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் ஏப். 30 வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டில் உயர் நீதிமன்ற மதுரை கிளை செயல்படுவதற்காக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் அடிப்படையில் ஏப். 20 முதல் மறு உத்தரவு வரும் வரை அவசரமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கீழ்கண்ட நீதிபதிகள் விசாரிப்பார்கள்.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அமர்வில் அவசர புதிய ரிட் மனுக்கள், ரிட் மேல்முறையீடு மனுக்கள், ஆள்கொணர்வு மனுக்களை விசாரிக்கின்றனர்.

தனியாக நீதிபதி பி.என்.பிரகாஷ், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482 பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் அவசர குற்றவியல் மனுக்களையும், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி அவசர புதிய மேல்முறையீடு வழக்குகளையும் (தனி நீதிபதி விசாரணைக்குரிய) விசாரிக்கின்றனர்.

நீதிபதி பி.வேல்முருகன், அவசர ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் அனைத்து விதமான அவசர புதிய ரிட் மனுக்களையும் விசாரிப்பார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in