

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை மற்றும் அவர்களது வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ‘ ரெட் அலர்ட்’ மாவட்டப் பட்டியலில் மதுரை இடம்பெற்றுள்ளதால் ஊரடங்கை அமல்படுத்துவதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.
தேவையின்றி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு, அன்பு நகர், தபால் தந்திநகர், நரிமேடு மற்றும் புறநகர் பகுதிகளான மேலூர் காந்தி நகர், முகமதியார்புரம், கொட்டாம்பட்டி அருகில் சொக்கலிங்கபுரம், திருமங்கலம் ரோஜா நகர், கோச்சடை அருகிலுள்ள கீழமாத்தூர், எழுமலை, உசிலம்பட்டி நகரில் எஸ்ஓஆர் நகர் உள்ளிட்ட 15 இடங்களில் வசித்த 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளும் அருகில் சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள தெருக்களும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் அடிக்கடி ஆய்வு செய்கின்றனர்.