Published : 17 Apr 2020 07:07 AM
Last Updated : 17 Apr 2020 07:07 AM

ஆன்லைன் மூலம் பணம் கட்டினால் வெளிநாட்டு மதுபானங்களை டோர் டெலிவரி செய்வதாக மோசடி: பல லட்சம் ரூபாயை இழந்த மதுப்பிரியர்கள்

வீடுகளுக்கே வந்து வெளிநாட்டு மதுபானங்கள் கொடுப்பதாகக் கூறி ஒருகும்பல் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது.

கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதிக பணம்கொடுத்து மதுவை வாங்க மதுப்பிரியர்கள் தயாராக இருப்பதை அறிந்துடாஸ்மாக் கடையில் திருட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதேபோல மதுப்பிரியர்களின் ஏக்கத்தை பயன்படுத்தி, அவர்களிடம் ஒரு கும்பல் பல லட்சம் மோசடி செய்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் எலைட் டாஸ்மாக் கடை உள்ளது. வெளிநாட்டு மற்றும் விலை உயர்ந்த மதுபானங்கள் இங்கு கிடைக்கும். 144 தடை உத்தரவால் வீடுகளுக்கே வந்து மதுபானங்கள் விற்பனை செய்வதாகவும் எலைட் டாஸ்மாக் கடையின் முகவரியுடன் முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வெளியானது. அதில் ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மதுப் பிரியர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர், “சென்னை அண்ணா நகர் எலைட் டாஸ்மாக் கடையில் இருந்து பேசுவதாகவும் உங்களுக்கு தேவையான மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கிறோம். பில் தொகையில் பாதி பணத்தை மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். மீதி தொகையை வீட்டுக்கு வந்து மதுபானம் கொடுக்கும் நபரிடம் கொடுத்தால் போதும்” எனக் கூறியிருக்கிறார்.

போலீஸார் எச்சரிக்கை

இதை நம்பி நூற்றுக்கணக்கானவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆன்லைனில் பணம்கட்டியுள்ளனர். பணம் கட்டி நீண்ட நேரம்மதுபானம் வீட்டுக்கு வராததை தொடர்ந்து, மீண்டும் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது,அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

அதன்பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதுப்பிரியர்கள், தங்களது காவல் துறை நண்பர்களிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்துஉள்ளனர். அவர்கள் மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அவர் ஒடிஷாவில் இருந்து பேசியது தெரிந்தது.

மதுப்பிரியர்கள் இதுகுறித்து புகார்கள் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்றமோசடி கும்பலிடம் கவனமாக இருக்கும்படி போலீஸார் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x