

தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
தேனி மாவட்டத்தில் இதுவரை 41 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். மீதம் 40 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 18 பேர் தொடர் சிகிச்சை காரணமாக குணமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் டீன் (பொறுப்பு) இளங்கோவன் முன்னிலையில் ஓரு வாகனத்தில் இருவர் வீதம் 9 வண்டியில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் போடி, 3பேர் பெரியகுளம், 4 பேர் அல்லிநகரம், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் ஆவர்.
வீட்டிற்குச் சென்றாலும் அங்கு இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின்பு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும்.
தொடர்ந்து பலரும் குணமடைந்தால் ஹாட்ஸ்பாட் பகுதியில் இருந்து அடுத்த நிலைக்கு மாற வாய்ப்புள்ளது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.