Last Updated : 16 Apr, 2020 04:10 PM

 

Published : 16 Apr 2020 04:10 PM
Last Updated : 16 Apr 2020 04:10 PM

விருதுநகர் மாவட்டத்தில் 4 கிராமத்தினருக்கு கரோனா நிவாரண நிதி: உயர் நீதிமன்றம் அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கே நேரில் சென்று கரோனா நிவாரண நிதி வழங்கவும், சமூக இடைவெளியைப் பின்பற்றி இலவசப் பொருட்கள் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வீ. கரிசல்குளம், பூம்பிடாகை, திருவளநல்லூர், எஸ். நாங்கூர் ஆகிய பகுதிகளில் திருச்சுழியை சேர்ந்த ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பினர் 2000-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்து கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த தடையை விலக்கக்கோரி ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், ரேசன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.ஆயிரம் மற்றும் அத்தியவாசிய பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருப்பதால், வீ. கரிசல்குளம், பூம்பிடாகை, திருவளநல்லூர், எஸ். நாங்கூர் கிராம மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் இலவச பொருட்கள் வழங்கு இயலாத நிலை உள்ளது. எனவே ஆட்சியரின் உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி தண்டபாணி வீடியோ கான்பிரன்ஸ் வசதியில் இன்று விசாரித்தார். கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் வாதிட்டார்.

விசாரணைக்குப்பின் ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றி விருதுநகர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கியும், நான்கு கிராமத்திலும் மக்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண நிதி வழங்கவும், இலவச பொருட்கள் வழங்கும் போது சமூக இடைவெளி கடைபிடிப்பதை ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர், விசாரணை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x