வழக்கறிஞர்களுக்கு உதவிய மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள்

வழக்கறிஞர்களுக்கு உதவிய மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள்

Published on

உயர் நீதிமன்ற மதுரை நீதிபதிகள் அனைவரும் சேர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு உதவியுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி உட்பட 15 நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் ஊரடங்கால் தொழில் பாதிப்பை சந்தித்து வரும் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்வதற்காக உயர் நீதிமன்ற கிளையில் உள்ள நான்கு வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் நிதியுதவி வழங்கினர்.

இந்த நிதியில் நான்கு சங்கங்கள் சார்பில் தலா 25 வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த உதவிக்காக உயர் நீதிமன்ற கிளை பார் அசோசியேஷன் தலைவர் என்.கிருஷ்ணவேனி, பொதுச்செயலர் என்.இளங்கோ, எம்ஏஎச்ஏஏ சங்கத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பசிக்கொடுமை பொதுவானது. அதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கு அல்ல. சூரத்தில் 20 ஆண்டுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்ட போது வைர வியாபாரிகள் உயிருடன் புதையுண்ட காட்சியை பார்த்துள்ளேன்.

ஒவ்வொருவரும் அரசு வழங்கிய உணவை பெற தட்டுகளுடன் வரிசையில் நின்றனர். இது வாழ்க்கையின் கடுமையான உண்மை. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in