

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி , குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000, பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பூதியம் உள்ளிட்ட தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. இதில் திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் 11 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் ஸ்டாலின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அளித்த பேட்டி:
”கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும், பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை எப்படியாவது தடுத்திட வேண்டும் என இந்த அரசு தடை உத்தரவு போட்டது. அதை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 48 மணிநேரத்துக்கு முன் தகவல் தெரிவிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏப்.15 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடத்துவதாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காவல்துறை வாயிலாக அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டது. 144 தடை உத்தரவு நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தெரிவித்து தடை விதித்தனர். திமுக இந்த விஷயத்தில் அரசியல் செய்ய விரும்பாததால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொலியில் மறுநாள் நடத்த முடிவு செய்தோம்.
இதே நேரத்தில் நேற்று சென்னையில் தமிழக துணை முதல்வர் தனது துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போட்டிருக்கிறார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம் விழுப்புரத்தில் உள்ள அதிகாரிகளை அழைத்து விழுப்புரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் கூட்டம் நடத்தியுள்ளார்.
11 கட்சித் தலைவர்கள் கூடும் கூட்டத்துக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு, அதிகாரிகளை வைத்து நடத்தும் இத்தகைய கூட்டங்களுக்குத் தடை விதிக்காதது ஏன்? இவர்களுக்கு இது பொருந்ததாதா? .
இந்தக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த அரசு மதிப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்கிறதா, அலட்சியப்படுத்துகிறதா பார்ப்போம், அரசின் நடவடிக்கை பொறுத்து இதுகுறித்த முடிவை அடுத்து கூடுகின்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரிய முடிவெடுத்து அறிவிப்போம்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.