Published : 16 Apr 2020 01:14 PM
Last Updated : 16 Apr 2020 01:14 PM

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1,000 கரோனா உதவித்தொகை: வங்கிக் கணக்கில் செலுத்தும் மதுரை மாநகராட்சி 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டதின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் 5,669 நபர்களுக்கு கரோனா வைரஸ் நிவாரண நிதியாக ரூ.56.69 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 8,649 வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று நோயால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழக அரசு கொரோனா தொற்று நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் வசிக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.86.49 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ள 8,649 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கபட்டது.

மாநகராட்சி ஆணையார் விசாகன் கூறுகையில், ‘‘தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ள 8,649 நபர்களிடம் வங்கிக் கணக்கு விவரம், அடையாள அட்டை, ஆதார் அட்டை விபரம் உள்ளிட்ட ஆவணங்கள் கோரப்பட்டதில் இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 5,669 சாலையோர வியாபாரிகளின் வங்கிக் கணக்கிற்கு தலா ரூ.1000 வீதம் ரூ.56.69 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2,980 சாலையோர வியாபாரிகள் வங்கி கணக்கு மற்றும் உரிய ஆவணங்கள் இன்னும் சமர்ப்பிக்க வில்லை.

எனவே வங்கிக் கணக்கு மற்றும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள அடையாள அட்டை வைத்துள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை 842 842 5000 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவுடன் அவரவர் வங்கி கணக்கில் கரோனா வைரஸ் தொற்று நிவாரணத்தொகை ரூ.1000 செலுத்தப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x