திருச்சியில் கரோனா சிகிச்சையில் குணமடைந்த 32 பேர் வீடு திரும்பினர்: உற்சாகமாக வழியனுப்பிய மருத்துவர்கள்

திருச்சியில் கரோனா சிகிச்சையில் குணமடைந்த 32 பேர் வீடு திரும்பினர்: உற்சாகமாக வழியனுப்பிய மருத்துவர்கள்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் முற்றிலும் குணமடைந்த நிலையில், இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 32 பேர் பூரண குணமடைந்தனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கைதட்டி உற்சாகப்படுத்தி இன்று காலை வழியனுப்பி வைத்தனர். பழங்களை வாங்கி அவர்களிடம் அளித்தனர்.

மீதமுள்ளவர்கள் சீரான உடல் நிலையுடன் இருப்பதாகவும், விரைவில் முழுமையாகக் குணம் அடைவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருச்சியில் மட்டும் ஒரேநாளில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது மக்கள் மத்தியில் கரோனா குறித்த அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வீடு திரும்பிய அனைவரும் டெல்லி நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in