Published : 15 Apr 2020 07:48 PM
Last Updated : 15 Apr 2020 07:48 PM

மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 1242 ஆக உயர்வு; தமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் கரோனா தொற்று 1,242 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர். தேவையான ஆய்வுக்கருவிகள் உள்ளன. யாருக்கு சோதனை நடத்தவேண்டும் என மத்திய அரசு, ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஆய்வு செய்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“இன்று விரிவான ஆய்வுக்கூட்டத்தை முதல்வர் நடத்தினார். தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வழிகாட்டி வருகிறார்.

தமிழகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகள் மொத்தம் 21,994. மாதிரிகள் எடுக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17,835.

இன்று ஒரே நாளில் 2,739 சோதனை நடத்தப்பட்டது. அதில் இன்று நோய்த்தொற்று உறுதியான எண்ணிக்கை 38. இதில் 34 பேர் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மீதியுள்ள 4 பேரில் 3 பேர் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் முதுநிலை மருத்துவர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 37. நேற்றுவரை டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 81. இன்றைய எண்ணிக்கை 37-ஐயும் சேர்த்தால் மொத்தம் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மருத்துவமனையில் சிகிச்சையில் 1,849 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொஞ்சம் உடல்நலப் பாதிப்புடன் இருப்பவர்கள் 9 பேர்.

இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சுவாசத்தொற்று (severe accute respiratory infection) காரணமாக அனுமதிக்கப்பட்டதால் 47 வயதான ஒருவர் உயிரிந்தார். மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 59 வயது மதிக்கத்தக்க ஆண். இதன் மூலம் மொத்தம் மொத்தம் 14 பேர் மரணமடைந்துள்ளனர்.

லேப் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 26 ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிகம் சோதனைக்கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம்தான். ஒரு லேபில் 3 ஷிப்ட், 260 சோதனைகள் நடத்த முடியும். தனியார் ஆய்வகங்களில் 100 சோதனைகள் நடத்த முடியும். மொத்தம் 5,600 பேருக்கு தினமும் சோதனை செய்யலாம்.

மத்திய அரசின் சார்பில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கிளினிக்கல் மேனேஜ்மென்ட் நன்றாக உள்ளது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் கரோனா தொடங்கிய காலத்தில் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை பரிசோதனை மையம், கருவிகள் குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு ஒரே கருத்து நோய் உருவான காலத்திலேயே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி மருந்து உற்பத்தியாளர்களை அழைத்து 160 கோடிக்கு மருந்துகளைக் கொள்முதல் செய்து வைத்துள்ளோம்.

அதன்பின்னர் கேரளாவில் முதல் கரோனா பிரச்சினை வந்தவுடன் பெரிய அளவில் கொள்முதல் செய்தோம். அதன் பின்னர் 3-வது கட்டமாக தமிழகத்தில் கரோனா தொற்று ஆரம்பித்தவுடன் மேலும் கூடுதலாக 3 லேயர் மாஸ்க், என் 95 மாஸ்க், பிபி கவச உடை, வென்டிலேட்டர், பிசிஆர் கிட் வரை மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்குத் தயாராக வைத்துள்ளோம்.

ஆகவே, இதில் எந்தக்காலத்திலும் தட்டுப்பாடு வராத அளவுக்கு ரூ.204 கோடிக்கு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டது. அந்த உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நோய்க்கான மருந்து, வாக்சின் இல்லை.

பல வயதானவர்கள் உட்பட பலரையும் வெற்றிகரமாக டிஸ்சார்ஜ் செய்துள்ளோம். தேவையான பாரசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள், ஒன்றரை லட்சம் நோயாளிகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள், உபகரணங்கள் உள்ளன.

26 லேப் உள்ளது. ஒரு நாளைக்கு 260 பேர் டெஸ்ட் கிட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் பிசிஆர் கிட் ஆர்டர் செய்யப்பட்டு 1 லட்சம் வந்துள்ளது. மத்திய அரசு மூலம் 20 ஆயிரம் வந்துள்ளது. அது நம்மிடம் உள்ளது. அது தவிர டாடா 40 ஆயிரம் கிட் வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே பொது சுகாதாரத்துறை சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம். அதனால்தான் கண்காணிப்பு மண்டலங்கள் வீடு வீடாகச் சோதிக்கப்படுகிறது. அதனால் சமுதாயப் பரவல் இல்லை. இந்தியாவில் அதிகம் வென்லேட்டர் வைத்திருக்கக்கூடிய மாநிலமும் தமிழகம் ஆகும்.

எங்கெல்லாம் பாசிட்டிவ் கேஸ் வருகிறதோ அதையெல்லாம் நாம் தனித்தனியாகப் பிரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 558 பிரிவுகளாக தமிழகம் முழுவதும் பிரித்துள்ளோம். தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவரும் சாம்பிள்கள் மூலம் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பணி பிரதானமானது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்ற தாங்களே பணியைக் கேட்டு வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். பெருமைக்குரிய விஷயம் அது. அவர்களது பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் முக்கியம் என முதல்வர் தெரிவித்துள்ளார். அது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

குணமடைந்த நோயாளிகள் அவர்களுக்கு நேர்ந்த நிலை, முன்னேற்றம் குறித்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். நமக்கு முதல் வேலை நம்பிக்கை ஏற்படுத்துவதுதான். அதனால்தான் உயிரிழப்பு சதவீதம் 1.91% ஆக குறைக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் போன் நம்பர் வாங்கி கண்காணிக்கிறோம்.

ஒரு மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தொற்று உறுதியானவர்கள் இருந்தால் அதை ஹாட் ஸ்பாட் மாவட்டமாக மத்திய அரசு சொல்கிறது. பயண வரலாறு மற்றும் தொற்றுடன் உள்ளவர்கள், தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் எனச் சோதித்து வந்த நிலையில் தற்போது கண்காணிப்பு மண்டலத்தில் இருப்பவர்களையும் சோதனை நடத்தத் தொடங்கியுள்ளோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி எடுக்கிறோம். அதிகமான அளவில் டெஸ்ட் எடுக்கிறோம்.

தேவையான சோதனைக்கருவிகள் உள்ளன. தேவையான ஆய்வுகள் எடுக்கப்படுகின்றன. நமக்கு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி யாருக்கு சாம்பிள் எடுத்து சோதனை நடத்த வேண்டுமோ அவர்களுக்கு எடுத்து சோதனை நடத்துகிறோம்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x