ஊரடங்கு உத்தரவால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முடக்கம்; 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்
உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முடங்கியதால், 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மரக்காணம் உப்பளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும், மாநில அரசுக்குச் சொந்தமாக 1,500 ஏக்கர் நிலப்பரப்பிலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பு உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, லாரி, ரயில், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த ஊரடங்கால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் அதனை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லமுடியவில்லை.

உப்பளத்தில் இருந்து வரப்புகளில் சேமித்து வைக்கப்பட்ட உப்பை அள்ளவும் தொழிலாளர்கள் இல்லை. இதனால் உப்பள வரப்புகளில் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் உப்பளங்களில் சுமார் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உப்பளத் தொழிலாளர்கள் கூறியபோது, "எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே ஊரடங்கு முடியும் வரை எங்களுக்குப் போதிய அரிசி, காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in