Published : 15 Apr 2020 03:16 PM
Last Updated : 15 Apr 2020 03:16 PM

144 ஊரடங்கு மீறல்: தமிழகம் முழுவதும் இதுவரை 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; 1,97,536 பேர் கைது

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1 லட்சத்து 97ஆயிரத்து 536 பேர் கைது செய்யப்பட்டு, 1 லட்சத்து 56 ஆயிரத்து 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 1,012 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தடை செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காரணமின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்கின்றனர், கைது செய்கின்றனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அனாவசியமாக வெளியில் சுற்றுவோர் மீது 269, 270, 188 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அரசு வேலைகளுக்கான காவல்துறைச் சான்றிதழ் பெறுவதிலும், பாஸ்போர்ட், வெளிநாடு செல்ல விசா விண்ணப்பிக்கும்போதும் இது கடும் பாதிப்பை உருவாக்கும். இதுகுறித்த புரிதல் இல்லாமல் வலம் வரும் பொதுமக்கள் கைது செய்யப்படுகின்றனர்.

ஏப்ரல் 15 வரை இவ்வாறு வெளியில் சுற்றியவர்கள் கைது, வழக்கு, வாகனம் பறிமுதல் விவரம்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்து 97 ஆயிரத்து 536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 56 ஆயிரத்து 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதத் தொகையாக 82 லட்சத்து 32 ஆயிரத்து 644 ரூபாய்வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 748 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று சென்னையில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை வெளியில் சுற்றியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசி பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை சென்னை காவல் ஆணையர் , சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144-ன் கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144 சிஆர்பிசி சட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (14/4) காலை 6 மணி முதல் இன்று (15/4) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 1,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இதில் தொடர்புடைய 589 இருசக்கர வாகனங்கள், 36 இலகு ரக வாகனங்கள், 1 கனரக வாகனம் மற்றும் 92 இதர வாகனங்கள் என மொத்தம் 718 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x