Published : 15 Apr 2020 02:09 PM
Last Updated : 15 Apr 2020 02:09 PM

கரோனா முதல்வர் நிவாரண நிதி; 40,032 பிசிஆர் ஆய்வுக்கருவிகள் வழங்கிய டாடா நிறுவனம்: முதல்வர் பழனிசாமி நன்றி 

கரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் ஆய்வுக்கருவிகளை வழங்கிய டாடா நிறுவனத்துக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா நிவாரண நடவடிக்கைக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான பங்கை வகிப்பது பிசிஆர் ஆய்வுக்கருவியாகும். இதன் மூலம் கரோனா தொற்று உறுதியானவர்களைச் சோதிக்க முடியும். முக்கியமான இந்த ஆய்வுக் கருவி தமிழக அரசிடம் 24,000 மட்டுமே உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ரேபிட் கிட்ஸ் மூலமாக பரவலாக பரிசோதனை செய்ய முடியும் என்கிற நிலையில் ரேபிட் கிட்ஸ் வரவில்லை. இதனால் பிசிஆர் ஆய்வுக்கருவிகளே சோதனைக்குப் பயன்படுகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் 40,032 பிசிஆர் ஆய்வுக்கருவிகளை வழங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

“தமிழக அரசு, கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கரோனா வைரஸ் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன.

மேலும், கரோனா வைரஸ் பாதித்தவர்களைக் கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான கருவிகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது டாடா நிறுவனம், கரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக, சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.

இச்சூழ்நிலையில் டாடா நிறுவனம் செய்த இந்த உதவிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பாக தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x