Published : 15 Apr 2020 12:51 PM
Last Updated : 15 Apr 2020 12:51 PM

பொதுமக்களுக்கு உதவ பிரதமரே வேண்டுகோள் வைக்கிறார்; தமிழக அரசு தடுக்கிறது: திமுக வழக்கறிஞர் பேட்டி

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ அரசு விதித்துள்ள நிபந்தனைகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், நாளை சில உத்தரவுகள் பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்று திமுக வழக்கறிஞர் வில்சன் பேட்டி அளித்தார்.

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குவதை வழிமுறைப்படுத்தும் வகையில் அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த வழிமுறையில் சாதாரண மக்களுக்கு எந்த நிவாரணப் பொருளும் சென்று சேராது என்று அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து திமுக வழக்கறிஞர் வில்சன் அளித்த பேட்டி:

“கடந்த 12-ம் தேதி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் நேரடியாகப் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொடுக்கக்கூடாது என உத்தரவில் தெரிவித்திருந்தது. மறு நாள் விளக்கம் என்கிற பெயரில் அறிக்கை வெளியிட்டது.

இதை எதிர்த்து திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

எங்கள் தரப்பு வாதத்தில் 'தமிழகத்தில் ஏழரை கோடி மக்கள் இருக்கிறார்கள் அனைவருக்கும் அரசு உதவி போய்ச் சேர வாய்ப்பில்லை. இது சாதாரண மக்களைப் பாதிக்கும். திமுக சார்பில் கடந்த 11-ம் தேதி வரை நிவாரணப் பொருட்கள் கொடுத்தோம். அதனால் அரசு வெளியிட்ட அறிவிப்பு உள்நோக்கத்துடன் உள்ளது.

இது அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 21-ஐ மீறும் செயல். அரசின் இந்த அறிவிப்பு நிச்சயமாக ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது’ எனத் தெரிவித்தோம்.

அரசுத் தரப்பில் இதுகுறித்துப் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் எங்களிடம், ’நீங்கள் எந்த அளவுக்கு அரசுத் தரப்பில் தெரிவித்துள்ள சமூக விலகலுடன் நிவாரணப் பொருட்களைக் கொடுப்பீர்கள் என ஒரு பதில் மனுத்தாக்கல் செய்யுங்கள். நாளை நாங்கள் ஒரு இதுபற்றி உத்தரவிடுகிறோம்’ எனத் தெரிவித்தனர்.

மேலும், எங்கள் வாதத்தில், 'திமுக சார்பில் 39 எம்.பி.க்கள் 100 எம்எல்ஏக்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், 7 ராஜ்ய சாபா எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் மூலம் நேரடியாகச் சென்று உணவு கொடுக்கக்கூடாது என்பது அவர்கள் எண்ணம். பிரதமர் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்க வழி வகைகள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமரே ஏழை எளிய மக்களுக்கு உதவத் தன்னார்வலர்களை அனுமதிக்கச் சொல்கிறார். ஆனால் தமிழக அரசு இங்கு தடை செய்கிறது. இதனால் பட்டினிச் சாவுதான் அதிகரிக்கும். எல்லாவற்றையும் நாங்கள்தான் செய்வோம் என சொல்வதும் சரியல்ல’ என வாதம் வைத்தோம்.

நேற்று உதவி செய்த தன்னார்வலர்களைக் கைது செய்துள்ளனர். கண்ணாடி விட்டுக்குள் இருந்துகொண்டு ஏழை மக்களைப் பார்க்கிறார்கள். இது சரியல்ல என்று தெரிவித்தோம்' ''.

இவ்வாறு திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x