Last Updated : 14 Apr, 2020 02:43 PM

 

Published : 14 Apr 2020 02:43 PM
Last Updated : 14 Apr 2020 02:43 PM

ஊரடங்கால் குமரியில் சித்திரை விஷு கனி காணல் இன்றி வெறிச்சோடிய கோயில்கள்: வீடுகளிலேயே வழிபாடு செய்த பக்தர்கள்

குமரியில் சித்திரை விஷீவை முன்னிட்டு நடைபெறும் கனி காணல் நிகழ்ச்சி ஊரடங்கால் நேற்று நடைபெறவில்லை. இதனால் கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பக்தர்கள் காய்,கனிகளை வீடுகளிலேயே படைத்து அலங்காரம் செய்து வழிபட்டனர்.

கேரள பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் சித்திரை விஷீ கனிகாணல் மிகவும் பிரசித்தி பெற்றது.

சுவாமி, மற்றும் கோயில் சன்னதி முன்பு காய் கனிகளை அலங்காரம் செய்து அதிகாலையிலே பூஜைகள் நடைபெறும். இதை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு காய்கனிகள் பிரசாதமாக வழங்கப்படும்.

சித்திரை முதல் நாளான விஷீ அன்று கனிகாணலில் பங்கேற்று காய்கனிகளை பிரசாதமாக பெற்று வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகி அந்த ஆண்டு முழுவதும் மங்களகரமாக இருக்கும் என்பது ஐதீகம்.

தற்போது கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருப்பதால் சித்திரை விஷீ கனிகாணல் கோயில்களில் நடைபெறாது. பாரம்பரிய பூஜை மட்டுமே நடைபெறும். பக்தர்கள் வரவேண்டாம் என குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறையினர் அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கமாக சிறப்பாக கனிகாணல் நடைபெறும் கோயில்களான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில் ஆகியவை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. எப்போதும் இல்லாத வகையில் கனி காணலில் பங்கேற்க முடியாத பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வீடுகளிலேயே காய்,கனிகளை அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர். இதைப்போல் குமரி மாவட்டம் முழுவதும் நகர, கிராம பகுதிகள் எங்கும் உள்ள கோயில்களிலும் சித்திரை விஷீவிற்கான பூஜைகள் எளிமையான முறையிலே நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x