Last Updated : 13 Apr, 2020 08:36 PM

 

Published : 13 Apr 2020 08:36 PM
Last Updated : 13 Apr 2020 08:36 PM

நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்கத் தடை; வடலூர் தருமசாலைக்கும் அரசின் உத்தரவு பொருந்துமா?

நிவாரணப் பொருட்களை பைகளில் வைத்துத் தொங்கவிட்டுச் செல்வது போன்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உதவி தேவைப்படும் மக்களுக்கு தனி நபர்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் நேரடியாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வழங்காமல், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கும் வகையில் தமிழக அரசு வழிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தன்னார்வ அமைப்பின் நிர்வாகி அறிவழகன் என்பவர் கூறுகையில், "ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழகத்தில் உள்ள தன்னார்வ அமைப்பினர் உதவி வழங்கியதில் எந்தக் குளறுபடியும் இதுவரை நடைபெறவில்லை. அரசின் இந்த உத்தரவு மேலும் பட்டினிச் சாவுகளுக்கு வழி வகுக்கும்.

மேலும், அரசு அதிகாரிகள் மூலம் வழங்க அறிவுறுத்துகின்றனர். அரசும் ஒப்பந்த அடிப்படையில் அமைப்புகளை வைத்துதான் விநியோகிக்கின்றனர். அவர்கள் நாங்கள் வழங்கும் உணவு, தேவைப்படுவோரைச் சென்றடையுமா என்ற சந்தேகம் எழுகிறது.

பல இடங்களில் அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் படியே மக்களுக்குத் தன்னார்வ அமைப்பினர் கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். அரசின் உத்தரவால் இதுவும் தடைபடும் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று, வடலூர் தருமசாலையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.

ஜெர்மனியில் உதவி செய்ய விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிவாரணப் பொருட்களை பைகளில் வைத்துத் தொங்கவிட்டுச் சென்றுவிடுகின்றனர். உதவி தேவைப்படுவோர் தேவையான பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாத நம் நாட்டின் முதுமொழி ஜெர்மனியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்றாவது அரசு செய்திட முன்வர வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் கேட்டபோது, "அரசு நல்ல நோக்கத்தின் அடிப்படையிலும், நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைக் கருதி, உதவும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தடை விதிக்கவில்லை.

அரசு அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்தவர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் என பலர் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கி வருகிறோம். வடலூர் தருமசாலையில் கூடாரத்தின் கீழ் தொடர்ந்து 3 வேளை உணவு வழங்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் 'மோடி கிச்சன்' என்ற பெயரில் பாஜகவினரும் பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கி வருவதாக தன்னிடம் யாரும் அனுமதி கோரவில்லை. இதற்கு வேறு நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. அரசின் அறிவுறுத்தலைக் கேட்டு, அதன்படி செயல்பட தன்னார்வ, தனி நபர்கள் மற்றும் அரசியல் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x