

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவருக்குத் தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தொற்று சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இரு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கிய இடம், யாருடனாவது தொடர்பு இருந்ததா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஎஸ்ஐ மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இஎஸ்ஐ மருத்துவமனையில் தங்குவதற்குப் போதிய வசதிகள் இல்லாததால், முதுகலை மருத்துவ மாணவர்கள் இருவரும் அரசு மருத்துவமனை தங்கும் விடுதிக்கு வந்து சென்றனர். இது தொடர்பாகவும் மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.