Last Updated : 13 Apr, 2020 04:27 PM

 

Published : 13 Apr 2020 04:27 PM
Last Updated : 13 Apr 2020 04:27 PM

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் இன்மையால் பசியால் தவிக்கும் ஆதரவற்றோர்: தினமும் 150 பேருக்கு உணவளிக்கும் மெரைன் போலீஸார்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை நம்பி உலாவந்த ஆதரவற்றோர் ஊரடங்கால் பாசியால் தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆதரவற்றோர் 150 பேருக்கு தினமும் மெரைன் போலீஸார் உணவளித்து வருகின்றனர்.

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

உணவு பொருட்களை வாங்குவதற்கும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலமான கன்னியாகுமரி ரயில் நிலையம், மற்றும் கடற்கரை சாலைகளில் அனாதையாக சுற்றித்திரியும் ஆதரவற்றோர் உணவின்றி தவித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள், மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், கடைகள் திறக்காமல் வெறிச்சோடி காணப்படுவதாலும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் சிரமம் அடைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்ட மெரைன் போலீஸார் அவர்களுக்கு பசியாற ஒருவேளையாவது உணவளிப்பது என முடிவெடுத்தனர். கன்னியாகுமரி மெரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீஸார் 150 ஆதரவற்றோருக்கு தினமும் உணவளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மெரைன் போலீஸார் கூறுகையில்; சுற்றுலா பயணிகளிடம் இருந்து உணவு பொருட்களையும், காசுகளையும் பெற்று பசியாறி வந்த ஆதரவற்றோர் பலர் தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலையோரங்களில் உணவின்றி பசியால் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு ஒரு வேளையாவது உணவளிக்க வேண்டும் என முடிவெடுத்து இவற்றை வழங்கி வருகிறோம். காய்கறிகளுடன் சாம்பார் சாதம் போன்று எளிமையான முறையில் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x