Last Updated : 13 Apr, 2020 04:04 PM

 

Published : 13 Apr 2020 04:04 PM
Last Updated : 13 Apr 2020 04:04 PM

வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு புகலிடம்: தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடியில் வீடுகள் இல்லாமல் சாலையோரம் வசித்து வந்த 54 பேர் மீட்கப்பட்டு, மாநகராட்சி மண்டபத்தில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும்படி தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடியில் வீடு இல்லாமல் சாலையோரம் வசித்து வந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாப்பாடு உள்ளிட்ட உதவிகளை செய்து வந்த போதிலும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அவர்கள் மிகவும் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகளை மாநகராட்சி மற்றும் சோயா தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் மற்றும் தெருவோரம் வசித்த 54 பேர் கடந்த 2 நாட்களாக மீட்கப்பட்டு மாநகராட்சி வாகனத்தில், தூத்துக்குடி சிவன் கோயில் அருகேயுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 54 பேருக்கும் தனித்தனியாக கட்டங்கள் வரையப்பட்டு, அந்த பகுதியில் அவர்கள் இருக்கவும், படுத்து தூங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் முடி வெட்டி புத்தாடை அணிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு தேவையான பாய், தலையணை உள்ளிட்ட பொருட்கள், 3 வேளை சாப்பாடு, குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 தன்னார்வலர்கள் மண்டபத்திலேயே இருந்து அவர்களை பராமரித்து வருகின்றனர். இன்று அவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர்.

இதனை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், நகர்நல அலுவலர் எஸ்.அருண்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x